டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிறன்று மழையால் இறுதிச்சுற்று ஆட்டம் பாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மெல்போர்னில் 25 மி.மீ. வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் 95% உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கூடுதல் நாளான திங்கள் அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றாலும் அன்றைய தினமும் 95% மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் இரு தினங்களிலும் இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறாமல் போனால் கடைசியில் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். நாக் அவுட் ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தின் முடிவு தெரிய இரு இன்னிங்ஸ்களிலும் குறைந்தபட்சம் 10 ஓவர்களாவது வீசப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வருட டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மெல்போர்னில் மட்டும் 3 ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டன. மேலும் இங்கிலாந்து - அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டன. டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து.