தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 75.56% புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதையும் தாண்டி ஆபத்து ஏதாவது உள்ளதா?
இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா தோற்று நியூசிலாந்தில் விளையாடும் இலங்கை அணி இரு டெஸ்டுகளையும் வென்றால் மட்டுமே ஆஸி. அணியின் வாய்ப்பு பறிபோகும்.
இந்தியாவின் நிலைமை எப்படி உள்ளது?
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. இதனால் 58.93% புள்ளிகளுடன் இந்தியாவின் வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
4-0 என இந்தியா வென்றால் 68.06% புள்ளிகளும் 3-1 என வென்றால் 62.5% புள்ளிகளும் கிடைக்கும். ஒருவேளை டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தால்?
இந்தியா 2-2 என டெஸ்ட் தொடரைச் சமன் செய்துவிட்டால், இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என வென்றால் இந்தியாவால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இந்திய அணி 1-1 எனத் தொடரை டிரா செய்து, தென்னாப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வென்றாலும் வாய்ப்பு கிட்டாது.
எதற்கு வம்பு, இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லாமல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம்.