யார் சிறந்த கேப்டன்: எம்.எஸ்.தோனியா? ரோஹித் சர்மாவா? ரவி சாஸ்திரி பதில்!
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகேந்திர சிங் தோனியைப் போல மிகச் சிறந்த கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஐசிசி ரிவ்யூவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக முக்கியமான தருணங்களில் சிறப்பான முடிவுகளை ரோஹித் சர்மா எடுத்துள்ளார். மகேந்திர சிங் தோனியைப் போன்று ரோஹித் சர்மாவும் மிகச் சிறந்த கேப்டன். இவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன் எனக் கேட்டால், முடிவுகள் எடுப்பதை பொறுத்தவரையில் இருவரும் சிறந்த கேப்டன்கள்தான் எனக் கூறுவேன். ஆனால், மகேந்திர சிங் தோனியைக் காட்டிலும் மிகச் சிறந்தவர் ரோஹித் சர்மா என என்னால் கூற முடியாது. மகேந்திர சிங் தோனி என்ன செய்துள்ளார் என்பது நமக்குத் தெரியும். அவர் பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
அண்மையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, டி20 போட்டிகளில் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 62 சர்வதேச டி20 போட்டிகளில் போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 72 போட்டிகளில் விளையாடி 41 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.