527 நாள்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவுள்ள ரிஷப் பந்த்!
கார் விபத்தில் சிக்கிய பிறகு முதல் முறையாக ரிஷப் பந்த் வருகிற ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
கார் விபத்தில் சிக்கிய பிறகு முதல் முறையாக ரிஷப் பந்த் வருகிற ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் நாளை மறுநாள் (ஜூன் 1) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் விளையாடுகின்றன. ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் 14 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு, நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பந்த் வருகிற ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து ரிஷப் பந்த் பிசிசிஐயில் பேசியிருப்பதாவது: இந்திய அணிக்காக நீல நிற ஜெர்சியை அணிந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு (527 நாள்கள்) விளையாடவுள்ளது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது. இந்திய அணிக்காக விளையாட முடியாததை நினைத்து கவலையடைந்தேன். எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணி வீரர்களை ஒரே இடத்தில் ஒன்றாக பார்ப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது, உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய அணி வெளிநாடுகள் பலவற்றில் விளையாடியிருக்கிறது. ஆனால், உலகக் கோப்பை நடைபெறும் இடங்கள் சற்று வித்தியாசமானவை. அமெரிக்காவில் கிரிக்கெட் நடத்தப்படுவது சிறப்பானது. உலக கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் அது உதவும். இங்கு புதிய ஆடுகளங்கள் உள்ளன. அந்த ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். இந்த உலகக் கோப்பை எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 446 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.