கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு இணையதளம்: ராமதாஸ் கோரிக்கை!
தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளதை போல தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும்...
சென்னை: தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளதை போல தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், எத்தனை ஆணையங்கள் அமைக்கப்பட்டாலும் அழிக்க முடியாத முள்மரமாக வளர்ந்து நிற்பது கல்விக் கட்டணக் கொள்ளைதான்.
டெல்லியில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய இணையதளத்தை அம்மாநில அரசு கடந்த 17ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் கட்டணக் கொள்ளை பற்றி பெற்றோர் புகார் செய்யலாம்.
புகார் செய்பவர்கள் அதை உறுதி செய்வதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு புகார் செய்தவுடன், அதற்கு அத்தாட்சியாக பதிவு எண் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, அடுத்த 15 நாட்களில் அப்புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை புகார்தாரருக்கு தெரிவிப்பர். புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டெல்லியை விட பல மடங்கு கல்வி கட்டணக்கொள்ளை தலைவிரித்தாடும் தமிழகத்தில் இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இந்த இடங்கள் பணக்கார மாணவர்களை கொண்டு நிரப்படுவதுடன், அவர்களை ஏழைகள் எனக் காட்டி அவர்களுக்கான கட்டணத்தை அரசிடம் வசூலிக்கும் கொடுமையும் நடக்கிறது.
டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய வசதியாக புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும்.
இவ்வாறு ராம்தாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.