முகப்பு
தமிழ்நாடு

பட்டியல் இன கட்சிகள் தங்களுக்குள் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும்: இயக்குநர் பா.இரஞ்சித் அழைப்பு 

பட்டியல் இன கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். 

Updated On : 7 டிசம்பர், 2018 at 3:25 PM
பகிர்:

சென்னை: பட்டியல் இன கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். 

மறைந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினம் வியாழனன்று சென்னையில் கொண்டாப்பட்டது. இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் , பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இருக்கிறார்கள்?  அவர்களில் யாராவது சமீபத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தினி மற்றும் ஸ்வாதி பற்றிப் பேசியிருக்கிறார்களா?அவர்கள் சார்ந்திருக்கிற கட்சி அவர்களைத் தடுக்கிறதா? கட்சி அவர்களைப் பேச அனுமதிக்காது.     

பட்டியல் இனத்தில் இருந்து பதவிக்குத் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர் அந்த சமூகத்தின் பிரச்னை குறித்து குரல் எழுப்பா விட்டால், நீங்கள் எதற்கு தலைவராக இருக்கிறீர்கள்? முதலில் கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நாங்கள் உங்களை தலைவர்களாக்குகிறோம். 

பட்டியல் இன கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட வேண்டும். 234 தொகுதிகளில் அல்ல முதலில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளில் போட்டியிடுவோம். அதில் சேர்ந்து வேலை செய்வோம். 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 7 தனித் தொகுதிகளில் போட்டியிடுவோம். தலித்துகள் முதலில் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.