சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே விவசாயி கல்லால் தாக்கி கொலை
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே விவசாயி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே விவசாயி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி நொரச்சி வளவை சேர்ந்தவர் முருகன் (50) விவசாயக் கூலி. ஓய்வு நேரத்தில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்குச் சென்று வந்தார். இன்று அதிகாலை வீட்டிலிருந்த அவர் வேட்டைக்குச் செல்வதாகக் கூறி ஹெட்லைட் ஒன்றைத் தலையில் கட்டியவாறு அங்குள்ள வனப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
இன்று பகல் அவரது சடலம் அவரின் வீட்டுக்கு அருகே உள்ள கொல்லன்கரடு என்ற இடத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தவெள்ளத்தில் இருந்தது. அவருக்கு அருகில் ரத்தக்கரை படிந்த கல் இருந்துள்ளது. அவரை யாரேனும் கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மேச்சேரி காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் கிடந்த இடத்தில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரிடம் காவல்துறை துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு முருகன் பழனியின் மனைவியிடம் பேசியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கள்ளக்காதல் தொடர்பில் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையான முருகனுக்குச் செல்வி என்ற மனைவியும் தாமோதரன் (16), செந்தில்நாதன் (14) என்ற இரு மகன்களும் உள்ளனர்.