திருப்பூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் குமரன் சிலை முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் குமரன் சிலை முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரைக் கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் குமரன் சிலை முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற அதிமுகவினர் கூறியதாவது: திமுக அரசு பதவியேற்றது முதலே அதிமுக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கைப் பதிவு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரைக் கைது செய்து தொடர்ந்து பொய் வழக்குப் பதிவு செய்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன், முன்னாள் எம்.பி. சி.சிவசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், கரைப்புதூர் ஏ.நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.