கம்பம்: தேனி மாவட்டம், கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் யானை கூட்டம் புகுந்து சேதப்படுத்தியதால், 80 மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகியது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ளது வெட்டுக்காடு, இங்கு வாழை, தென்னை, திராட்சை, நெல், தோட்டப்பயிர்கள் உள்ளிட்ட பல ஏக்கர் நிலப் பரப்பளவில் விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது.
வெட்டுக்காட்டையொட்டி உள்ளது சுருளியாறு வனப்பகுதி, மேகமலை ஸ்ரீ வில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் பகுதியாகும்.
இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் யானை,சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
யானைகள் சேதப்படுத்தியதில் வேரோடு சாய்ந்த தென்னை.
சனிக்கிழமை இரவு வெட்டு காட்டிலுள்ள கூடலூரைச்சேர்ந்த சேதுபதி என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்த 10-க்கும் மேலான யானைக்கட்டம் மரங்களை வேரோடு சாய்ந்த்தது. தென்னை மரங்களிலிருந்து இளநீர் காய்களை சாப்பிட்டும் உடைத்தும் தூக்கி எறிந்தது.
இதை பார்த்த காவலாளி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விவசாயி சேதுபதிக்கு தகவல் தெரிவித்தார்.
யானைகள் சேதமாக்கியது பற்றி வனச்சரகர் அருண்குமாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சேதமான மரங்களை கணக்கெடுத்தனர்.
இது குறித்து வனச்சரகர் கூறும்போது, 80 தென்னை மரங்கள் சேதமாகியுள்ளது தெரியவந்துள்ளது, பட்டா, சிட்டா, அடங்கல் பெறப்பட்டு மாவட்ட வனத்துறை நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படும்.
விவசாயிக்கு அனுமதிக்கப்பட்ட இழப்பீடு பெற்றுத்தரப்படும். மேலும் யானைகளை விவசாய விளை நில பகுதிகளிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | 2021-ல் 3,325 ரெளடிகள் கைது: டிஜிபி சைலேந்திர பாபு