அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை (ஜூலை 20) பிற்பகல் 2.15-க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த 11-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.
இதில், இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு பேருந்துகள் உள்பட 14 வாகனங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக வருவாய்த்துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீா்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்நிலையில், அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.