அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் காவல்துறை விசாரணை அறிக்கையை எஸ்.பி. வேலுமணிக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தன்னுடைய சகோதரர்கள், உறவினர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கிய முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் காவல்துறை விசாரணையின் அறிக்கையை தனக்கு தரக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையில், எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், எஸ்.பி.வேலுமணி கேட்டதற்கு இணங்க, விசாரணை அறிக்கையின் நகலை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.