அதிமுக பொதுக்குழு: திங்களன்று உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வரும் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யவுள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வரும் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யவுள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதாரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து வரும் திங்களன்று(செப்.5) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை எனில் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என அவர் தரப்பில் பல்வேறு கேள்விகளை முன்வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.