அதிமுக தலைமை அலுவலக ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளா்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருள்கள், ஆவணங்கள், சேதப்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து சி.வி.சண்முகம் எம்.பி.,, ஜூலை 23-ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், ஆக. 13-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். அதிமுக அலுவலக கலவரம் தொடா்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன.
Advertisement
கடந்த 7-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் சோதனையிட்டு வழக்குத் தொடா்பாக பல முக்கிய தகவல்களை சேகரித்தனா். அடுத்த கட்ட நடவடிக்கையாக, அந்த அலுவலகத்தின் மேலாளா் மகாலிங்கத்துக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை சுமாா் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் கலவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.