இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ-வின் தந்தை அண்மையில் காலமானார். இதனையடுத்து, துக்கம் விசாரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள கேபி முனுசாமியின் இல்லத்திற்கு இன்று வருகை புரிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பருவ மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு பலத்த மழை குறித்து தகவல் தெரிவித்தது. தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டது. பருவ மழை குறித்து, தமிழக அரசு மக்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட வடிகால் பணிகளை, தற்போதைய அரசு நிறைவேற்ற வில்லை. மழை வெள்ளம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமர்த்தி, தங்களது பணியை தட்டிக் கழிக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, முக்கிய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம்.
சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழக முதல்வருக்கு நிர்வாகம் எவ்வாறு செய்வது என தெரிகிறதா என தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர் செயல்பட்டிருப்பார்.
தமிழகத்தில் ஊழல் செய்வதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் பலர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: தேசியக் கொடி அகற்றப்பட்ட காரில் நீதிமன்றம் வந்த பொன்முடி!
அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், பாலகிருஷ்ணா ரெட்டி, வளர்மதி, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.