காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் திருக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில். பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க இத் திருக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
திருக்கோயில் ஸ்தல ஸ்தானீகர்களால் ஏழு யாக சாலைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்யப்பட்டு இரண்டு காலை பூஜைகளும் நடைபெற்றன.
இதையும் படிக்க |
முதற்கட்டமாக ராஜகோபுரம் பல்லவ கோபுரம் பகுதியில் உள்ள விகட சக்கர விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், ராஜ கோபுர விநாயகர், ராஜ கோபுர ஆறுமுகர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது.
யாகசாலை முடிந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து வந்து திருக்கோயில் மூலவர் கருவறை முன்பு அமைந்துள்ள தெய்வங்களுக்கு பாலாலய அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் ரா. வான்மதி திருக்கோவில் செயல் அலுவலர்கள் ந. தியாகராஜன், அமுதா, வேலனரசு, செந்தில்குமார், ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வேல்மோகன் தலைமையிலும் கோயில் செயல் அலுவலர் பா. முத்துலட்சுமி முன்னிலையிலும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோயில் ஸ்தானீகர்கள், கோயில் சிவாச்சாரியார்கள் ஆகியோர் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.