கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிகளில் 35க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி அருகே வடரங்கம், பட்டிய மேடு, பாலுறான் படுகை உள்ளிட்ட மூன்று இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் எடுப்பதற்கான காலம் முடிந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மணல் குவாரி செயல்படவில்லை.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வந்த நிலையில் இன்று சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவப்படை பாதுகாப்புடன் 35-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் எவ்வளவு ஆழம் மணல் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.