எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாமக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியே அமையும் என்று பொதுக்குழுவில் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்தார்.
பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழுவில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸே தேர்வு செய்யப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டுமின்றி, ராமதாஸை அன்புமணி அவமதித்து விட்டதாக பொதுக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழு மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”இந்தப் பொதுக்குழு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாட்டிற்கான தீர்மானங்கள்.
முதல்வர் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க முடியும். ஆனால் அரசு தட்டிக்கழித்து வருகிறது.
கூட்டணி தொடர்பாக உங்களில் மனங்களில் இருப்பதை நான் அறிவேன். எந்தக் கூட்டணிக்கு சென்றால் வெற்றிக் கிடைக்கும் என தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணி அமையும். நான் காட்டும் வழியில் நடந்தால் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். தொண்டர்களைக் கேட்காமல் நான் ஏதும் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்துவேன்” என்றார்.
இதையும் படிக்க: பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.