முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் விலகல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் விலகல் தொடர்பாக...

Updated On : 25 மார்ச், 2025 at 5:49 AM
கோப்புப்படம்
பகிர்:

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகளும் விலகியுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.

நீதிபதிகளை விலகியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு வேறோரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

உயா்நீதிமன்றத்தில் வழக்கு: அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது; அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலா், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதுபோன்று சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய அழைப்பாணைக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்றுதான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை தொடா்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொதுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா். மேலும், அதைத் திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரி, சோதனை நடத்தும்போது, அதற்குரிய காரணங்களை எழுத்துபூா்வமாகத் தெரிவிக்க வேண்டும். எந்தத் தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

இதைத் தொடா்ந்து நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்ற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும்; இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வியெழுப்பினா்.

இதை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனா் என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘பொய் சொல்ல வேண்டாம்; அனைத்தும் செய்தித் தாள்களில் வெளியாகியுள்ளது. அமலாக்கத் துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தைத்தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், இன்று(மார்ச் 25) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நீதிபதிகள் இருவரும் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →