அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது குறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக கட்சி சார்பற்ற பாராட்டு விழாவில், நான் பங்கேற்றேன். ஆனால், செங்கோட்டையன் பங்கேற்காமல், அந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை. அதனால்தான் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
ஆனால், தமிழக அரசின் இலவச சைக்கிள் கொடுக்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள்தான் இருந்தன. சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம்? என்று கேட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள். டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். இவர் எல்லாம் அதிமுக பற்றி கருத்துக் கூற கூடாது.
கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் உண்மையாக இல்லை. பிரிந்து சென்றவர்களை செங்கோட்டையன் சந்திக்கவில்லை. அவர் சந்தித்தவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
இணைந்து பணியாற்றலாம் என்றபோது, ஓபிஎஸ்க்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போதும் அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. ஓபிஎஸ் அவரது மகன் இருவரும் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள்.
ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவி மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவரை அமைச்சராக்கியது நான். நான் பொறுப்பேற்ற போதுதான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன்.
திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் செங்கோட்டையன். அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா?
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்கள் திட்டம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எப்போது பார்த்தாலும் நான் அம்மா விசுவாசி என கூறி வருகிறார். அப்படி என்றால் அமைச்சராக இருக்கும்போது அம்மா செங்கோட்டையனை எதற்காக நீக்கினார்.
நான் முதலமைச்சரான பின்னர்தான் அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுத்தோம். இதுதான் அவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. மாவட்ட செயலாளர் பதவியும் ஜெயலலிதா இருக்கும்போது எடுத்து விட்டார்கள். இப்படி உண்மைக்கு மாறாக செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
டிடிவி தினகரனை பத்தாண்டுக்கு முன்பாகவே ஜெயலலிதா, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தான் சசிகலா அவர்கள் இருந்த காலகட்டத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி வாங்கினர். அப்போதும் கட்சியில் இணைந்து வரவில்லை. இணைக்காமலேயே கொடுத்து விட்டார்கள்.
செங்கோட்டையனை பொறுத்தவரை எப்போதும் அவர் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேசியது கிடையாது.பொதுக்கூட்டத்திலும் பேசியது கிடையாது. ஆக அவர் திமுகவிற்கு பி டீம் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
அதிமுக தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால் தலைமை கழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்காது.
நாங்கள் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கொடுத்தோம். மாறாக அவர் செயல்பட்டார். பிறகு அதிமுகவினுடைய தலைமை கட்சி அலுவலகத்தையும் கைப்பற்ற முயற்சித்தார். ஆட்களை அழைத்துச் சென்று கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். இப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு உண்மையாக இருப்பார்களா- பதவி இல்லையென்றால் எதற்கும் இவர்கள் செல்வார்கள்.
நான்கு நாட்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார். இவர்கள் அதிமுக ஆட்சி வருவதற்காக நினைக்கவில்லை, திமுகவை மறைமுகமாக ஆதரித்து மறைமுக ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது.
இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பி டீமாக செயல்படுவது தான் இவர்களது திட்டம் என்று இபிஎஸ் கூறினார்.
இதையும் படிக்க... துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு: செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.