அவசரகதியில் கோவை செம்மொழி பூங்கா திறப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 25.11.2025 அன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சுழல் SEIA Clearance (State Environmental Impact Assessment Clearance from TNPCB) அனுமதி பெறப்படவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
அவற்றில் ஒருசில-
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட பகுதிகளை இணைத்து அம்மாவின் அரசு அறிவித்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-IIஐ முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 168 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 50% பணிகள் முடிவடைந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.
அதேபோன்று, கோவை மாநகராட்சியில் சுமார் 200 உட்புற சாலைகள் உட்பட முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கோவை மாவட்ட வளர்ச்சிக்கு நாங்கள் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை சரியான முறையில் முன்மொழிவு அனுப்பாத காரணத்தால் இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்!
அம்மாவின் அரசு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இப்படி திமுக அரசு, அம்மாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப் பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.