தொடர் மழை: முதல்வரின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...
தொடர் கனமழை காரணமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் அக்.24 மற்றும் அக்.25 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், முதல்வரின் பயணம் அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில், தூத்துக்குடியில் இருந்து தென்காசிக்கு சாலை வழியாக அவர் செல்வார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தென்காசியில் இருந்து அக்.29 ஆம் தேதி மதுரைக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அக்.30 ஆம் தேதி ராமநாதபுரத்தின் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் பூஜையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், இந்தப் பயணத்தில், மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதைச் செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தொடர் மழை: இடிந்து விழுந்த வேலூர் கோட்டை அகழியின் தடுப்புச்சுவர்!