பாஜக - காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நீடிக்கும் இழுபறி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக, காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக, காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்ப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளிலும் பிரசாரங்களிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜகவும் காங்கிரஸும் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தில்லியில் பியூஷ் கோயல் தலைமையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இறுதிப் பட்டியலுடன் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வரவிருப்பதாகவும், மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இன்று இரவு அல்லது நாளைக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பிலும் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தில்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுடன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் 85 விழுக்காடு தொகுதிகளில் வேட்பாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
எஞ்சிய 15% இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று காலையோ அல்லது நாளை காலையோ முழு வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.
தேசிய கட்சி என்பதால் ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவர்களிடம் இதே கேள்வியை கேட்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.