முகப்பு
தமிழ்நாடு

கரூா் பலி: சிபிஐ விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் விஜய்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Updated On : 19 ஜனவரி, 2026 at 6:36 AM
கோப்புப்படம்.
பகிர்:

கரூா் கூட்ட நெரிசல் பலி தொடா்பாக தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

விஜய்யிடம் இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா்.

அவா்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஜன.12-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ முதல்முறையாக அழைப்பாணை அனுப்பியது. அதைத்தொடா்ந்து விஜய் தில்லியில் நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் தொடா்ந்து 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பிறகு பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனா். இதைத்தொடா்ந்து, விசாரணைக்கு மீண்டும் திங்கள்கிழமை (ஜன.19) ஆஜராக விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக விஜய், ஞாயிற்றுக்கிழமை மாலை தனி விமானம் மூலம், சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிலையில் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் இன்று மீண்டும் ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Vijay has again appeared before the CBI office in Delhi today for questioning in connection with the Karur stampede incident.

முழு கட்டுரையைப் படிக்க →