வடக்கா? தெற்கா? அலைபாயும் காஸா மக்கள்!
தெற்கில் தொடர்ந்து வரும் தாக்குதலால் மீண்டும் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றனர் காஸா மக்கள்.
ஒரு நாட்டின் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவது கண் முன்னே காஸாவில் நிகழ்ந்து வருகிறது.
ஹமாஸின் தாக்குதலில் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போர் இன்று 13-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,478 எனத் தெரிவித்துள்ளது காஸாவின் சுகாதார அமைச்சகம். 12,000-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், 1300-க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கிறது அமைச்சகம்.
Advertisement
வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் இருந்து மக்களை இடம்பெயர எச்சரித்தது இஸ்ரேல் ராணுவம். அதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
இதையும் படிக்க: 500 பேர் பலி: காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு யார் பொறுப்பு?
இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் தெற்கு பகுதியில் கான் யூனிஸ் மற்றும் ராஃபா பகுதிகளில் நடந்த வான்வழி தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இட நெருக்கடி, தண்ணீர், உணவு பற்றாக்குறை ஆகியவை நிலவி வருவதால் சூழல் மோசமடைந்து வருகிறது.
எங்கு சென்றாலும் இது தான் கதி என்றால் நாங்கள் வீட்டிலேயே கண்ணியமாக இறந்து போகிறோம் என இடம்பெயர்ந்தோர் மீண்டும் வீடு திரும்ப முடிவெடுத்துள்ளனர்.