திருமணம் தொடர்பான பட்டப்படிப்பு: சீன பல்கலைக்கழகம் அறிமுகம்!
சீனாவில் திருமணம் தொடர்பான இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அங்குள்ள பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் திருமணம் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்காக அங்குள்ள சிவில் விவகார பல்கலைக்கழகம் புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
’திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை’ என்கிற பட்டப்படிப்புத் திட்டம் வருகிற செப்டம்பர் முதல் தொடங்குவதைத் தொடர்ந்து, திருமணம் சார்ந்த தொழில்கள் மற்றும் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி தொழில் வல்லுநர்களை உருவாக்கவிருப்பதாக பெய்ஜிங்கில் இயங்கி வரும் இந்தக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து இரு ஆண்டுகளாகக் குறைந்து வரும் நிலையில், பெரும்பாலும் திருமணத்தைச் சார்ந்துள்ள குழந்தைப் பிறப்பின் வீழ்ச்சியை சமாளிக்க அரசின் கொள்கை வகுப்பாளர்கள் நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பரவலான அரசின் கொள்கைகளால் குழந்தையைப் பெற்றெடுக்க திருமணம் அவசியமானது என்ற நிலை உள்ளது. குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்து அரசு மூலம் குழந்தைக்கான நன்மைகளைப் பெறுவதற்கு பெற்றோரின் திருமணச் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், தனியாக இருக்கும் பெண் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு குழந்தைகள் வளர்க்கும் உரிமைகள் வழங்கப்படவில்லை.
இந்தப் படிப்பின் மூலம் சீனாவின் திருமணம் மற்றும் குடும்பக் கலாச்சாரத்தை மாணவர்கள், பொதுமக்களிடையே முன்னிலைப்படுத்தி, திருமண பழக்கவழக்கங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவுள்ளதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 12 மாகாணங்களில் இருந்து 70 மாணவர்களை ‘குடும்ப ஆலோசனை வழங்குதல், உயர்நிலை திருமணத் திட்டமிடல்கள், பொருத்தம் பார்க்கும் சாதனங்களை உருவாக்குதல்’ போன்ற துறைகளில் சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலை வாய்ப்பின்மை, தனிமையில் இருப்பது போன்ற காரணங்களால் பலரும் திருமணத்தை தள்ளிப் போடுவதாகக் கூறப்படும் வேளையில் இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து சீன சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.