ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி தில்லி வந்துள்ளார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் காபூலில் விரைவில் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.
பின்னர், முத்தாகி பேசுகையில், “பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானைத் தாக்கும் வகையில், மற்ற நாடுகளுக்காக ஒருபோதும் ஆப்கன் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம். மேலும், அவர்கள் எங்களது தைரியத்தை சோதித்துப் பார்க்க வேண்டாம்” என்றும் பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்திய நிலையில், கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பாக தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி கூறுகையில், “ஆப்கனின் எல்லைப்புறப் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை தவறான செயலாகவே கருதுகிறோம்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானியர்களின் அமைதியை அவர்கள் சோதிக்கக் கூடாது.
எங்களை பற்றிய புரிதல் வேண்டும் என்றால் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேளுங்கள். இதுபோன்ற விளையாட்டு உங்களுக்கு நல்லதல்ல” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த எல்லைத் தாண்டிய பிரச்சினைகள் மூலமாக இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நல்ல நட்புறவு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.