
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை தாக்கிய பிள்ளையார்குளம் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மற்றொரு வழக்கில் புதன்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் ரவிசேகர். இவரது மனைவி புவனா என்ற புலியூரான். இவர்களுக்கு மருது(17), குரு ராகேஷ்(15) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ரவிசேகர் கூலி வேலை செய்து வருகிறார். புவனா பிள்ளையார்குளம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தலையிட்டு ரவிசேகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் உயிருக்கு பயந்து ரவிசேகர், கோயம்புத்தூர் சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட ரவிசேகர் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது மகன்களை பார்ப்பதற்காக செவ்வாய்கிழமை ஊருக்கு வந்தார். இரவு 8 மணி அளவில் வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் ரவிசேகர் நின்றிருந்த போது, அங்கு வந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீண்டும் ஏன் ஊருக்கு வந்தாய் எனக் கூறி ரவிசேகரை கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் தாக்கினார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட ரவிசேகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைகள் சேர்ந்தார்.
இதுகுறித்து வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் பெற்று தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.