கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெறவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பேசும்போது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் கடுமையான தாக்குதல்களைச் சந்தித்துவருகின்றனர். இது முற்றுப்புள்ளி வைக்கமுடியாத பேரழிவாக அமைந்திருக்கிறது. எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், இது மட்டும் மாறவில்லை. இந்தியர் மீனவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய அரசு அவர்களை மறந்துவிடுகிறது” என்றார்.
மேலும், கடல் கடந்து போனவரின் கண்ணீரால் கடல் நீர் உப்பாக இருப்பதாக அறிஞர் அண்ணாவின் கூற்றை மேற்கோள் காட்டிய முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், “கடல் நீர் இன்று சிவப்பாகும் நிலைமையில்தான் இருக்கிறது. தமிழக மீனவர்கள் சிந்திய ரத்தம் தான் என்று சொல்லும் நிலை இருக்கிறது.
மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தலில் போது கூறினார். ஆனால், எதுவும் மாறவில்லை. இலங்கையில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் கூட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மொத்தமாக 97 மீனவர்கள் நாட்டுக்கு வெளியே சிறையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்தாண்டு மட்டும் 530 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.
அண்டை நாடாக இருந்துகொண்டு தமிழக மீனவர்களைத் தாக்குவது வேதனையளிக்கிறது. மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இதுவரை 74 கடிதங்களை பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறேன்.
பிரதமரை நேரில் சந்திக்கும் போது இதுபற்றி பலமுறை தெரிவித்திருக்கிறேன். இலங்கைக் கடற்படையினர் கடிதம் எழுதும் போது மட்டும் விடுவிடுத்து விட்டு பின்னர் கைது செய்துவிடுகின்றனர். கடலுக்குச் செல்லும் நமது மீனவ சொந்தங்கள் வீடு திரும்புவார்களா? என்று குடும்பத்தினர் மீளா கவலையில் உள்ள நிலை இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு கட்சத்தீவை மீட்பதுதான்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபோது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியும் கடுமையாக எதிர்த்தார். கச்சத்தீவு கொடுக்கப்பட்டதை எதிர்த்து அப்போதைய திமுக எம்பிக்கள் இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிசாமி உள்ளிட்டோரும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் கச்சத்தீவு மீட்பது குறித்து இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, மீனவர்கள் பிரச்சினை குறித்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று கோரி தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் நலன் கருதி அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


