12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மக்கள் தரிசனம் நிகழ்ச்சி
முதல்வர் எச்.டி.குமாரசாமி, 12 ஆண்டுகளுக்கு முன்பு கடைப்பிடித்து வந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை மீண்டும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் எச்.டி.குமாரசாமி, 12 ஆண்டுகளுக்கு முன்பு கடைப்பிடித்து வந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை மீண்டும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
2006-ஆம் ஆண்டு பாஜக ஆதரவுடன் மஜத கூட்டணி ஆட்சிஅமைத்த போது, அதன் முதல்வராக செயல்பட்ட எச்.டி.குமாரசாமி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து களைவதற்காக தினமும் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்தநிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், முதல்வரை நேரில் சந்தித்து குறைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தனர். குமாரசாமியின் இந்தத் திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
12 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவின் கூட்டணி அரசை அமைத்துள்ள முதல்வர் குமாரசாமி, மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த முதல்வர்குமாரசாமி, இனிமேல் குமாரகுருபா சாலையில் உள்ள கிருஷ்ண அரசு இல்லத்தில் மக்களைச் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, கிருஷ்ணா அரசு இல்லத்துக்கு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வந்த முதல்வர் குமாரசாமி, மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கிருஷ்ணா அரசு இல்லத்தில் தினமும் காலை 10 மணி முதல் காலை 11 மணிவரை மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதற்கு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.