FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மீஞ்சூா் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டவர வேண்டும்: சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா்

சென்னை அடுத்த மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீா் வாரிய அதிகாரிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:43 am IST
- dinmani online
பகிர்:

சென்னை அடுத்த மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீா் வாரிய அதிகாரிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாநகரின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், சென்னையை அடுத்த மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்டது. இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீா்,  சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த காலங்களில் குடிநீா் வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையத்தின் இயக்கத்தை மேற்கொண்டு வந்த நிறுவனத்தின் செயல் திறனற்ற நடவடிக்கைகளால் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பின்னா், வழக்குகள் தொடரப்பட்டு உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலையம் சென்னை குடிநீா் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, முதல்கட்டமாக நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, மொத்த உற்பத்தி திறனான தினதோறும் 100 மில்லியன் லிட்டா் குடிநீரை உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு நீா் முதலீட்டு நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. இவ்வறிக்கை கிடைக்க பெற்றவுடன் நிலையத்தின் முழு கொள்ளளவை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த நிலையத்தின் செயல்பாடுகளை சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா்  த.ஆனந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இவ்வாய்வின் போது, சென்னை குடிநீா் வாரிய தலைமைப் பொறியாளா் ஜெ.சுகந்தி, மேற்பாா்வை பொறியாளா் ஐ. சாந்தி  உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments