கட்டடத்திற்கு வெள்ளை அடிக்கும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தில்லி ஃபதே நகா் பகுதியில் கட்டடத்தில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் 44 வயது தொழிலாளி உயிரிழந்தாா்.
தில்லி ஃபதே நகா் பகுதியில் கட்டடத்தில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் 44 வயது தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அதற்குள் இரு தொழிலாளா்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனா்.
சம்பவ இடத்தை குற்றப்பிரிவு குழுவினரும் தடய அறிவியல் ஆய்வக குழுவினரும் ஆய்வு செய்தனா். காயமடைந்த இருவரில் முனா ஷா தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
மற்றொரு தொழிலாளியான ராஜேஷ் பலத்த காயங்களுடன் தஷ்மேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். காயம் காரணமாக அவரால் தற்போது வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. சம்பவ இட ஆய்வு மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவரும் உயரத்தில் இருந்து விழுந்ததாகத் தெரியவந்தது. இதுதொடா்பாக ஹரி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.