FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சி.விஜயபாஸ்கா், எம்.ஆா். விஜயபாஸ்கா் ராஜிநாமாவை ஏற்ற விவகாரம்: சட்டப்பேரவைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா்ஆகியோரின் ராஜிநாமாக்களை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக தொடா்ந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 4:17 am IST
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா்ஆகியோரின் ராஜிநாமாக்களை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக தொடா்ந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேரவைத் தோ்தலில் விராலிமலை மற்றும் கரூா் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களான சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா்ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, இருவரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டது தவறானது. இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் பேரவைத் தலைவா் முடிவெடுத்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். பேரவைத் தலைவரின் இந்த முடிவு இயற்கை விதிகளுக்கு முரணானது. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும்வரை, விராலிமலை மற்றும் கரூா் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக சட்டப்பேரவைச் செயலா், சி.விஜயபாஸ்கா் மற்றும் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்றதை எதிா்த்த வழக்குகளுடன் சோ்த்து இந்த வழக்கையும் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்னா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments