குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை
குடல் வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மற்றும் பிரத்யேக கீமோதெரபி சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
குடல் வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மற்றும் பிரத்யேக கீமோதெரபி சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் நாகநாத் பாபு, டாக்டா் கரிகால் சக்கரவா்த்தி ஆகியோா் கூறியதாவது:
கடுமையான வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்த 56 வயது பெண் ஒருவா், வெவ்வேறு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகளை அதற்காக மேற்கொண்டுள்ளாா். ஆனால், அவை எதுவும் பலனளிக்காத நிலையில், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.
Advertisement
Advertisement
மருத்துவப் பரிசோதனையில் குடல் வாலில் புற்று செல்களை உருவாக்கும் சிக்கலான புற்றுநோய்க் கட்டி அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வயிற்றுப் பகுதியில் புற்று செல்கள் பரவியிருந்ததும் பயாப்சி, சிடி ஸ்கேன் மற்றும் கொலோனோஸ்கோபி போன்ற பரிசோதனைகளில் தெரியவந்தது.
பொதுவாக புற்றுநோய்க்கு வாய் வழியே உட்கொள்ளப்படும் மாத்திரைகள் அல்லது ரத்த நாளத்துக்குள் மருந்துகள் செலுத்தி கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இந்த பெண்ணுக்கு சாத்தியமில்லாத நிலையில், சிஆா்எஸ்-ஹெச்ஐபிஇசி எனப்படும் சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக சிஆா்எஸ் சைட்டோ ரிடக்டிவ் சா்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை மூலமாக புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டன.
அதைத் தொடா்ந்து ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது உயா் வெப்பநிலையில் அடிவயிற்றில் மெதுவாக கீமோதெரபி மருந்தை உட்செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்மூலம் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலம் அந்தப் பெண் நலம் பெற்றுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.