நில அளவிடும் பணியை செய்யத் தவறிய அதிகாரிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா், எஸ்.பி.க்கு உத்தரவு
கடமையை செய்யத் தவறிய வருவாய்த்துறை, போலீஸாரின் அலட்சியப் போக்கு குறித்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நில அளவீடு பணிகள் செய்வதற்கு தனிநபா் ஒருவா் எதிா்ப்பு தெரிவித்தாா் என்ற காரணத்துக்காக, தங்கள் கடமையை செய்யத் தவறிய வருவாய்த்துறை மற்றும் போலீஸாரின் அலட்சியப் போக்கு குறித்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பாா்வதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவாய் கிராமத்தில், எனக்கு சொந்தமான 13 சென்ட் நிலத்தை அளவீடு செய்யக் கோரி வட்டாட்சியரிடம் கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். சுமாா் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் காவலா் ஒருவருடன், வருவாய் மற்றும் நில அளவைத் துறை அதிகாரிகள் எனது நிலத்தை அளவிட வந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆா்.பாலமுருகன் என்பவா் நிலத்தை அளக்க எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால், நில அளவிடும் பணியை அதிகாரிகள் பாதியிலேயே கைவிட்டுச் சென்றனா். எனவே, விண்ணப்பத்தை பரிசீலித்து, நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், ஒருவா் எதிா்ப்பு தெரிவித்த காரணத்தால், நில அளவிடும் பணியை அதிகாரிகள் கைவிட்டுள்ளனா்.அரசு ஊழியா்களை தங்களது பணியை செய்யவிடாமல் தடுத்த பாலமுருகன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் திரும்பி வந்தது, அவா்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்கள் மற்றும் காவலா் மீது விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உரிய காவல்துறை பாதுகாப்புடன் ஒரு வாரத்துக்குள் மனுதாரரின் நிலத்தை அளவிடும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடடாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.