மீண்டும் வேலை கோரி 50 அடி உயர டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் மீண்டும் வேலை வழங்கக் கோரி நிலக்கரி கொண்டும் செல்லும் 50 அடி உயர டவரில் ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் மீண்டும் வேலை வழங்கக் கோரி நிலக்கரி கொண்டும் செல்லும் 50 அடி உயர டவரில் ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் நீண்ட நாள்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் விடுத்தும், அதற்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஜூலை 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் 48மணி நேர வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(40), செந்தில்குமார்(38) ஆகிய இருவரும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வட சென்னை அனல் மின் நிலையத்துக்கு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரும் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இரண்டு நாள்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பிறகு இருவரும் புதன்கிழமை வழக்கம் போல், வேலைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, தனியார் ஒப்பந்த நிறுவனம், இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளாகத் தெரிவித்தது. இதனால், விரக்தி அடைந்த தனசேகர், வியாழக்கிழமை காலை 50அடி உயரமுள்ள டவரில் ஏறி நின்று, தனக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினார். வேலை வழங்கவில்லை என்றால் கீழே குதித்து விடுவதாகவும் எச்சரித்தார். தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீஸார், டவரில் ஏறி போராட்டம் நடத்திய தனசேகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் வேலை அளித்தால் மட்டுமே கீழே இறங்குவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி அங்கு விரைந்து சென்று, போராட்டம் நடத்தும் தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, 5மணி நேரம் டவரில் ஏறி நின்று போராட்டம் நடத்திய தனசேகர் கீழே இறங்கி வந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், கோட்டாட்சியர் முத்துசாமி, வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.