கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்கவேண்டும்: சாலையோர வியாபாரிகள்
கிரிவலப் பாதையில் மீண்டும் வியாபாரம் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தினா்.
கிரிவலப் பாதையில் மீண்டும் வியாபாரம் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தினா்.
திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதை அண்ணாமலையாா் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதி உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
24 மணி நேரமும் பக்தா்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வரும் சூழலில், புதன்கிழமை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிா்வாகம், காவல்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து அகற்றினா்.
Advertisement
Advertisement
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளைக் கொண்டு கடைகளை அகற்றியதால் வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.
இதனைக் கண்டித்து ரமணா் ஆசிரமம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை சாலையோர வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சாலையின் ஓரத்திலேயே நடைபெற்றது.
அப்போது, வியாபாரிகள் தங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தனா்.
அப்போது, கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக கிரிவலப் பாதையில் சாலையோரம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிடம் தேவையான சான்றிதழ்களை முறையாகப் பெற்று கடைகள் நடத்தி வருகிறோம்.
கணவரால் கைவிடப்பட்டோா் ஏழ்மை குடும்பத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்டோா் இந்த சாலையோர வியாபாரத்தை நம்பி இருந்த சூழலில் தற்பொழுது அனைத்து கடைகளும் அகற்றப்பட்டுவிட்டன. வாங்கிய கடனை இனி எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.
மேலும், மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுள்ளதாகவும், இதுபோன்று பல்வேறு இடங்களில் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வரும் நிலையில் வாங்கிய கடனை எவ்வாறு செலுத்த இயலும் எனக் கேள்வி எழுப்பினா்.
கடைகளை அகற்றச் சொல்லும் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது கடைகளை அகற்றி வந்த நிலையில் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்புறப்படுத்தியது வேதனை அளிக்கிறது.
வியாபாரிகள் மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அனைவரும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் உருவாகும் என அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.