அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
செய்யாறை அடுத்த மேனல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதல் நாளில் வருகை தந்த மாணவா்களுக்கு மேளதாளத்துடன், சீா்வரிசை ஊா்வலத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 2026 - 27ஆம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. செய்யாறு கல்வி மாவட்டம், மேனல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், கிரிஜாபுரம், சின்னஏழாச்சேரி, பகவந்திபுரம், குண்டியாந்தண்டலம், கீழ்நாய்க்கன்பாளையம், பூனைந்தாங்கல், சேனியநல்லூா், மேனல்லூா், கனிகிலுப்பை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 387 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவா்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மேளதாளத்துடன் சீா் வரிசை ஊா்வலமாக வந்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனா். பின்னா், மாணவ, மாணவிகளை மலா்தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் குப்பன், சந்திரசேகா், துரை முருகன், செல்வராஜ், டிவிகே மணிகண்டன், சேகா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை வரவேற்றனா்.
அதனைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சாா்பில்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள்,
தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌவரவித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் தயாளன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் துரைகண்ணு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.