திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளை அமமுக வெல்லும்: டி.டி.வி. தினகரன் பேச்சு
திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம், தமிழகத்தில் அமமுக தனது
திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம், தமிழகத்தில் அமமுக தனது செல்வாக்கை பெருமளவில் உயர்த்தும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அமமுக சார்பில் ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் ஆகியவை வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசியதாவது:
ஜெயலலிதா பிறந்த நாளில் நடக்க இருந்த இந்தப் பொதுக்கூட்டம் தமிழகத்தை ஆள்பவர்களால் தடுக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் வென்று சசிகலாவின் பிறந்த நாளில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் அமமுகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி வரும். ஆர்.கே.நகர் தொகுதியைப்போல் இவ்விரு தொகுதிகளிலும் அமமுக நிச்சயம் வெற்றி பெறும்.
டெல்டா பகுதிகளில் ஏரிகள் தூர்வாராததைக் கண்டித்து அமமுக மீண்டும் போராட்டம் நடத்தும். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றி பெறும். அடுத்து மத்தியில் யார் ஆட்சி செய்வார்கள், யார் பிரதமராக வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நிலை வரும். இதற்கு அமமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.
2019-இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெல்வது லட்சியம் என்றாலும், 37 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். இதேபோல், 200 சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் செந்தில்
பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்ச்செல்வன், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி.பார்த்திபன், மேற்கு மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணி, மத்திய மாவட்டச் செயலர் கலையரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.