FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ஜோலார்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் செலுத்திய வைப்புத் தொகையை திரும்பத் தராததால் வாடிக்கையாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஜோலார்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் செலுத்திய வைப்புத் தொகையை திரும்பத் தராததால் வாடிக்கையாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். 
ஜோலார்பேட்டைக்கு உள்பட்ட பாதர் கெசு சாலையில் கூட்டுறவு கடன் கட்டட சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த வங்கியில் செலுத்திய வைப்புத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
இந்நிலையில், இந்த வங்கியில் ஜோலார்பேட்டை அருகே சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்த சங்கர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் செலுத்தியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வைப்புத் தொகை காலம் முடிந்ததால் பணத்தைப் பெற வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், சங்கர் உள்ளிட்ட சிலர் புதன்கிழமை வங்கிக்குச் சென்று பணம் கேட்டபோது, அதிகாரிகள் யாரும் இல்லை, அதனால் பணம் எடுக்க முடியாது என அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்களாம். இதனால், ஆத்திரமடைந்த சங்கர் தனது மனைவி, மகளை அழைத்துக்கொண்டு வங்கி உள்ளே சென்று தர்னாவில் ஈடுபட்டார். 
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்றனர். போலீஸாரைக் கண்டதும், சங்கர் குடும்பத்தினர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றனர். உடனே, போலீஸார் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்து சங்கர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து சங்கர் கூறியதாவது:  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மகள் திருமணத்துக்காக வங்கியில் ரூ. 5 லட்சம் வைப்பு செலுத்தினேன். அதற்கான வட்டியும் பெற்று வந்தேன். கடந்த 3 மாதங்களாக வைப்புத் தொகை காலம் முடிந்தும் வட்டியும், முதலும் கொடுக்கவில்லை. இந்தப் பணத்தை நம்பி மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தேன். முறையாக பணம் கிடைத்திருந்தால் கடந்த மாதமே மகளுக்கு திருமணம் முடிந்திருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments