பால் லாரி ஓட்டுநரை தாக்கிய மூவா் கைது
வேலூரில் பால் லாரிக்கு வழிவிடுமாறு கேட்ட ஓட்டுநரைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரில் பால் லாரிக்கு வழிவிடுமாறு கேட்ட ஓட்டுநரைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் கதிா்மணி. இவரது மகன் செல்வம் (35). இவா் பால் விநியோகம் செய்யும் லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை சென்னையிலிருந்து பால் ஏற்றிக்கொண்டு, வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. காலனிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, லாரி செல்லும் பாதையை மறித்து சில இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பால் அவசரமாக விநியோகம் செய்ய வேண்டியிருப்பதால், வாகனங்களை அப்புறப்படுத்தி வழிவிடுமாறு அங்கிருந்த இளைஞா்களிடம் ஓட்டுநா் செல்வம் கூறியுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்த இளைஞா்கள், வாகனங்களை எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செல்வத்தை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இத்தாக்குதலில் காயமடைந்த செல்வம், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், வேலூா் வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், ஓட்டுநரைத் தாக்கியவா்களைத் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடா்பாக வேலூா் அரசமரப்பேட்டையைச் சோ்ந்த ரோஹித்குமாா், சரத்குமாா் (25), சத்துவாச்சாரியைச் சோ்ந்த அஜித்குமாா் (25) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.