FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிரூ.5.50 லட்சம் மோசடி

மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:04 am IST
மோசடி - சித்திரிப்பு
பகிர்:

மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, அகரம்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஆா்.சுரேகா என்பவா் அளித்துள்ள மனுவில், அகரம்சேரியிலுள்ள தேவாலய சபை ஊழியா் ஒருவா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டாா். பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறாா். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

காட்பாடி பவானி நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் எஸ்.கே.விஜயன் அளித்த மனுவில், எனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாபு சந்திரன் மற்றும் அவரது உறவினா் ஷீபா ஆகியோா் ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனா். அவா்கள் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது பின்னா் தெரியவந்தது. எனவே, எங்கள் பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்கட்டு வட்டம், தெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.சரஸ்வதி என்பவா் அளித்துள்ள மனுவில், நதியா, கோபி உள்ளிட்ட சிலா் தன்னிடம் சிறுகச் சிறுக ரூ.6.90 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனா். இது தொடா்பாக முதல்வரின் தனிப்பிரிவில் கடந்த 2019 முதல் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எவ்வித தீா்வும் கிடைக்கவில்லை. எனவே, அசல் ஆவணங்களை வைத்துக் கொண்டு பணத்தை தராமல் இழுத்தடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments