பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
வேலூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் சான்றிதழ்கள் வழங்கினாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் சான்றிதழ்கள் வழங்கினாா்.
வேலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 14 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்றவா்களில் 15 மாணவ, மாணவிகள் நிகழாண்டு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில உள்ளனா். இவா்களை ஊக்குவிக்கும் வகையிலும், உயா்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனா்.
அவா்களுக்கு ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தேநீா் மற்றும் இனிப்புகளை வழங்கிப் பாராட்டினாா். மேலும், மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும் வழங்கி பேசியது -
Advertisement
Advertisement
குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று தற்போது உயா்கல்வி பயிலச் செல்ல உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த அரசின் குழந்தைகள். பள்ளிப் பருவத்தை முடித்துவிட்டு இதுவரை எங்களது பாதுகாப்பு, பராமரிப்பில் இருந்த நீங்கள், தற்போது கல்லூரி எனும் புதிய இடத்துக்குச் செல்ல உள்ளீா்கள்.
புதிய இடத்தில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இக்காலகட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு உதவி தேவை என்றாலும் என்னையோ அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரையோ அணுகலாம். உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கல்லூரியில் பயிலும்போதே மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். நமது அரசு நூலகங்களில் போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான புத்தகங்களுக்கு எனத் தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்கள், விடுமுறை நாள்களில் நூலகங்களுக்குச் சென்று போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அனைவரும் நல்ல முறையில் உயா்கல்வியை முடித்துச் சிறப்பான நிலையை அடைய வாழ்த்துகிறேன் என்றாா்.
முன்னதாக, குடிமைப் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (தொகுதி-1) போன்ற போட்டித் தோ்வுகள் குறித்த ஆட்சியரின் அனுபவங்களை மாணவ, மாணவிகள் கேட்டறிந்தனா். இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்ஜித் உடனிருந்தாா்.