FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்னூர், சூலூர், பெ.நா.பாளையத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அன்னூரில்  உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இக் கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா திங்கள்கிழமை இரவு துவங்கியது. செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு, 3.45 மணிக்கு அபிஷேகப் பூஜைகள் நடைபெற்றன. 4.45 மணிக்கு அலங்காரப் பூஜை, 5.55 மணிக்கு பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கரிவரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. பஜனைக் குழுவினர் சார்பில் பஜனைகள் நடைபெற்றன.
பெ.நா.பாளையத்தில்...
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
பிரசித்தி பெற்ற பாலமலை அரங்கநாதர் திருக்கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.பின்னர் அரங்கநாதர் சேஷவாகனத்தில் ஆசிவாசிகள் புடைசூழ சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினார். தொடர்ந்து ரங்கமண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைப் பாடி சேவித்தனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவத்திற்காக காலையில் 3 மணியலிருந்தே திரளான பக்தர்கள் குழுமியிருந்தனர். திவ்ய அலங்காரத்தில் தாயார்களுடன் சேஷவாகனத்தில் எழுந்தருளிய கரிவரதர் காலை 6 மணி அளவில் சொக்கவாசலில் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து ராமலட்சுமணர்களும், ஆண்டாளும் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பஜனை கோஷ்டியினருடன் நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
இடிகரையிலுள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில், நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், பழையபுதூரிலுள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோயில், காளிபாளையத்திலுள்ள திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்பட வைணவத் திருத்தலங்களில்  அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற பெருமாளை வழிபட்டனர்.
சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோயிலில்...
 சூலூர் அருகே உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 
இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, திருப்பாவை பஜனையுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்த, திருவேங்கடநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியை தரிசனம் செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments