பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணி ரத்து
கோவை மாவட்டத்தில் 42 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணியை முதன்மைக் கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 42 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணியை முதன்மைக் கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார்.
கோவை வருவாய் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வின்போது காட்டப்படாத, அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 42 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியருக்கான தகுதியைப் பெற்றிருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப் பணியாக நியமிக்கப்பட்டனர்.
பதவி உயர்வு கலந்தாய்வின் மூலம் நியமிக்கப்படாமல், தனி உத்தரவின் மூலம் இவர்கள் நியமிக்கப்பட்டதால், இந்த ஆசிரியர்களுக்கு எந்தவித பலன்களும் கிடைக்காது என்றும் எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், 42 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பிக் கொள்ள அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி உத்தரவை ரத்து செய்துள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், இந்த ஆசிரியர்களை ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பும்படி சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அருளானந்தம் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.