நீட்ஸ் திட்டத்தில் கடனுதவி பெற்ற நாடா இல்லாத தறிக்கூடத்தில் ஆட்சியர் ஆய்வு
பல்லடம் அரசங்காடு பகுதியில் மாவட்ட தொழில் மையம் மூலமாக புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்
பல்லடம் அரசங்காடு பகுதியில் மாவட்ட தொழில் மையம் மூலமாக புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் கடனுதவி பெற்று அமைக்கப்பட்டுள்ள நாடா இல்லாத தறிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இது குறித்து ஆட்சியர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் துவங்கி வேலைவாய்பினை உருவாக்கும் வகையில் அரசால் பல்வேறு வகையான சிறப்புத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டமும் (நீட்ஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 25 சதவீத மானியத்துடன் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான முதலீட்டில் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இத்திட்டத்தின் மூலம் 214 பயனாளிகளுக்கு ரூ. 40 கோடி மானியத்துடன் கூடிய ரூ. 171.48 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், அரசங்காடு பகுதியில் நாடா இல்லாத தறி நிறுவனம் வங்கி கடனுதவியாக ரூ. 99.50 லட்சம் பெற்று அதற்கு அரசு மானியமாக ரூ. 23.83 லட்சம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் வங்கிக்கு முறையாக கடனைத் திருப்பி செலுத்தியதற்காக ஊக்குவிக்கும் வகையில் ரூ. 232 லட்சம் பின்முனை வட்டி மானியமாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிறுவனங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவதுடன் பலருக்கும் வேலை வாய்ப்பினையும் வழங்குகிறது. புதிய தொழில்முனைவோர்கள் அரசின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான தொழில்களுக்கான மானியத்துடன் கூடிய கடனுதவிகளைப் பெற்றுப் புதிய தொழில்களை தொடங்கிப் பயன் பெற வேண்டும் என்றார். மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் கண்ணன், திட்ட அலுவலர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.