"பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'
வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு திருப்பூர் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளர் பட்டியல்
வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு திருப்பூர் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டன.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2019 குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் (வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர்) சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இதில், வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக கள விசாரணை நடத்தப்பட்டது.
இந்தக் கள விசாரணை இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும், பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களவைத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுன்சோங்கம் ஜடக் சிரு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர்கள் கிரேஸ்பச்சாவு (தாராபுரம்) , முருகன் (பொறுப்பு) (திருப்பூர்), மாநகராட்சி ஆணையர் சிவகுமார், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தேர்தல் தனி வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.