இருபிரிவினரிடையே மோதல் சூழல்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
மத்தூர் அருகே இருபிரிவினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மத்தூர் அருகே இருபிரிவினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகேயுள்ள மலையாண்டஹள்ளி பகுதியில் மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் சஞ்சய் காந்தி (22) , அவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் முருகன் (25) ஆகியோர் முயல் வாங்க சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்களை நிறுத்தி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்குள்ளும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மலையாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் தம்பிதுரை (25), மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் சஞ்சய்காந்தி (22) ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தகவலறிந்து ஊத்தங்கரை டிஎஸ்பி மற்றும் மத்தூர், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சமாதானம் செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சஞ்சய் காந்தியின் உறவினர்கள் மற்றொரு தரப்பினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்தூர் - தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊத்தங்கரை டிஎஸ்பி கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.