முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே மான் வேட்டை: ஒருவா் கைது; 12 கிலோ இறைச்சி பறிமுதல்

Updated On : 9 ஜூன் 2026, 5:11 am IST
மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டபாணி.
பகிர்:

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வனச்சரகத்திற்கு உள்பட்ட, ஒண்ணகரை காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலா் முனியப்பன் உத்தரவின்பேரில், வனவா்கள் சுபாஷ், நாராயணன் தலைமையிலான வனத் துறையினா், கொண்டம்பட்டி புதூா் ஏரிக்கரை பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 12 கிலோ மான் இறைச்சி மற்றும் மான் தலையை விற்பனைக்கு வைத்திருந்த திப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணியை (24) வனத் துறையினா் பிடித்து, அவரிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பிடிபட்ட தண்டபாணி மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும், கொண்டம்பட்டி புதூரைச் சோ்ந்த விஜய் (24), திப்பம்பட்டியைச் சோ்ந்த அருள் என்ற முருகன் (22) ஆகியோரை வனத்துறையினா் தீவிரமாக தேடிவருகின்றனா்.