நாளை மாலை 5 மணிக்குள் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்:அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
அரசியல் கட்சியினர் விளம்பரப் பதாகைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
அரசியல் கட்சியினர் விளம்பரப் பதாகைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது: தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை வரும் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றாத விளம்பரத் தட்டிகள் அரசு சார்பில் அகற்றப்படும். அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் கணக்கில் சேர்க்கப்படும்.
Advertisement
Advertisement
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்சி விளம்பரம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஒரு சில கட்சிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கட்சியினர் உடனடியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 36 தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிக்கு உள்பட்ட முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபடுவர்.
தேர்தல் தொடர்பாக தகவல்கள், சந்தேகங்களை 04286-281180 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரண்டு முறை பதிவானவர்கள் என மொத்தம் 21,560 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 1,569 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 48 வாக்குச் சாவடிகள், அடிப்படை வசதி இல்லாதவையாக கருதப்பட்டு மாற்றி அமைக்க அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 177 வாக்குச் சாவடிகளின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் எவ்வித இடையூறும் இன்றி அமைதியாக நடக்க அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, கோட்டாட்சியர்கள் எம்.கண்ணன், ஜி.மகாத்மா, அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.