கருணாநிதி மறைவு: அஞ்சலி; மௌன ஊர்வலம்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் அஞ்சலி மற்றும் மௌன ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் அஞ்சலி மற்றும் மௌன ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூரில்...
அனைத்து வர்த்தக சங்கத்தினரும் தாமாகவே முன்வந்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மூடினர். பேருந்துகள் இல்லாமல் பரமத்தி வேலூர் காமராஜர் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
மேலும், பரமத்தி வேலூரில் உள்ள தினசரி வாழைத்தார், வெற்றிலை மற்றும் பிலிக்கல்பாளையத்தில் உள்ள கரும்பு வெல்ல, சர்க்கரை விவசாயிகள் ஏலச் சந்தைகளிலும் புதன்கிழமை நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. பரமத்தி வேலூர் வட்டத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு தி.மு.க.,வினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நன்செய் இடையாறில் பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர்.
திருச்செங்கோட்டில்...
அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்ட மலர் மேடையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சட்டையம்புதூர், சூரியம்பாளையம், கவுண்டம்பாளையம், கூட்டப்பள்ளி, நெசவாளர் காலனி, பாவடித் தெரு போன்ற பகுதிகளில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன. பல்வேறு கட்சிகள் சார்பில் மௌன அஞ்சலி, மௌன ஊர்வலங்கள் நடைபெற்றன. ராசிபுரம் நகர திமுக, நகர மதிமுக, நகர சௌராஷ்டிரா விப்ரகுல சமூகத்தினர் சார்பிலும், சிறுபான்மை பிரிவு இஸ்லாமிய மக்களின் ஜாமியா மஜித் சார்பிலும் மௌன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
கட்டானச்சம்பட்டி கிராமத்தில் திரளான பெண்கள் திரண்டு ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக விவசாய அணி மாநில செயலரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், விடுதலைக் களம் அமைப்பின் நிறுவனர் கொ.நாகராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.